செம்மணி மனிதப்புதைகுழியானது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்த வலிமிகுந்த நினைவூட்டலாக இருப்பதாகத் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டிருந்தார். செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருப்பதை உணர்த்துவதாகவும், அம்மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின்போது குழந்தை உட்பட 3 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ், செம்மணி மனிதப்புதைகுழியானது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்த வலிமிகுந்த நினைவூட்டல் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி எம்மால் உண்மையைப் புறக்கணிக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள அவர், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெய்வதற்கு சுயாதீன சர்வதேச விசாரணையும், பொறுப்புக்கூறலும் இன்றியமையாதவையாகும் என வலியுறுத்தியுள்ளார்.